செய்தி :
யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை கொழும்பில் நேற்று நேரில் சந்தித்த இந்துமாமன்றத்தின் தூதுக்குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையிலிருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்த விஸ்தரிப்புத் திட்டத்தின்படி இந்தப் பிரதான வீதியிலுள்ள 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து யாழ்.இந்து மக்களும், இந்து நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், இது விடயமாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உடனடிக் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
மேற்படி வீதி விஸ்தரிப்புத் திட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நிபுணர்களிடம் பெறுமதியான மாற்றுத் திட்டங்கள் இருப்பதை அறிவதாகவும், அத்தகைய மாற்றுத் திட்டங்களைப் பாவித்து உத்தேச வீதி விஸ்தரிப்புத் திட்டத்தை மாற்றியமைத்து யாழ்.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படியும் அந்த மகஜர் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடனும், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து இது வியத்தில் நல்ல முடிவு எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.
இந்துமாமன்றப் பிரதிநிதிகள் குழுவினர் ஆளுநரைச் சந்தித்த போது திருக்கேதீஸ்வர ஆலய புனருத்தாரண வேலைகளைத் துரிதப்படுத்துமாறும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சிற்ப வேலைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும், யாழ்.பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைப்பதற்கும், மாணவர்களுக்குப் போதிய விடுதி வசதிகளை அமைத்துக் கொடுப்பதற்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், இடம்பெயர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்து மாமன்றத் தலைவரும், ஆலய அறங்காவலர் சபையின் தலைவருமான வி.கயிலாயபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபையின் பொருளாளர் திருமதி அ.கயிலாயபிள்ளை ஆகியோர் கொண்ட குழுவே ஆளுநரை அவரது கொழும்பு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியது.
---------------------------------------------------------------------
வணக்கம் அன்பான யாழ் தமிழ் மக்களே, வெள்ளம் வருமுன் அணைகட்ட வேண்டும், எமது கோவில்களை இடித்து சிங்களன் புத்த விகாரைகளை கட்ட போகின்றான்...(மைறைமுக உண்மை), சிந்தியுங்கள் மக்களே.. ஏன் கட்டாட்யமாக கோவில்களை இடித்தா வீதியை அகலபடுத்தமுடியும்?
கே.கே.எஸ் வீதியை விஸ்தரிப்பு செய்யவேண்டிய முக்கிய தேவை இருக்கிது என்பது உண்மை. விஸ்தரிப்பு செயும் பொளுது கோயில் இருக்கிற பக்கமாய் விஸ்தரிப்பு செய்யாமல் கோயிலுக்கு முன்பக்கத்தால வீதியை அகலப்படுத்தலாம்.
இலாவிடின் bypass வீதிகளை புதிதாக அமைக்கலாம், அப்படி புதிதாக வீதிகள் அமைக்கபடுமிடத்து வீதிகுஅருகாமையில் உள்ள இடங்கள் அபிவிருத்தியாகவும் வாய்ப்புண்டு..
குறிப்பு: இதனால பாதிக்கப்படக்கூடிய பெரிய கோயிலுகள் என்று பார்த்தால் வண்ணை வைத்தீஸ்வரம், நாச்சிமார் கோயில் ரெண்டையும் சொல்லலாம்.
உங்கள் பினூட்டல்கள் வரவேற்கபடுகின்றது..